Friday, July 30, 2010

வெள்ளியங்கிரி யாத்திரை

‘பூலோக கயிலாயம், தென்கயிலை, வெள்ளிமலை, வெள்ளியம்பலம் என பல திருநாமங்களால் அழைக்கப்
படும் வெள்ளியங்கிரியே, தட்சிண கயிலாயம்’ என்று ஈசன் உரைத்த செய்தியை நந்தி தேவர் முருகனுக்குச் சொல்ல, முருகன் நாரதமுனியிடம் தெரிவித்தார். அப் புனிதத்தலத்தை தரிசிக்க ஆவல்கொண்ட நாரதர், கொங்கு மண்டலத்தின் மூலஸ்தானமாக விளங்கும் வெள்ளியங்கிரியில் ஏறி பெருமானையும், அம்மையையும் தரிசித்தார். பின்னர், காஞ்சி நதியில் தீர்த்தமாடி, கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தார். அவர் ஸ்தாபித்த லிங்கம், நாரதேஸ்வரர்.
காலவ முனிவர் சிவலிங்க உபாசனைக்குத் தகுந்த இடமாகக் கருதியது வெள்ளியங்கிரியைத்தான். காஞ்சி நதியின் கரையில் இவரும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பஞ்சாட்சர மந்திரத்தை பதினையாயிரம் முறை ஜெபித்து தவமியற்றினார். இவர் ஸ்தாபித்த லிங்கம் காலவேஸ்வரர்.
இவ்விதம் ஈசனின் திருமுடியிலிருந்து உருகி
யோடி வரும் காஞ்சி நதியோரத்தில் நடந்தால்
பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் வரைக்கும் மாமுனிகள்
ஸ்தாபித்த ஏராளமான லிங்கங்களை தரிசிக்கலாம்.
வெள்ளியங்கிரியில் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் காசியில் 1000 பேருக்கு அன்னதானம் செய்த பயன் என்கிறது பேரூர் புராணம். ஜனவரி தொடங்கி மே வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இம்மலைக்கு வருகிறார்கள். இக்காலத்தில், ஏராளமானோர் அன்னதானம் செய்வார்கள். இதற்கென்றே, அடிவாரத்தில் பத்திரச் செட்டியார் மடம், தேவர் மடம், புரவிப்பாளையம் மடம், சுக்கிரப்ப கவுண்டர் மடம், பட்டிபோயன் மடம் என 10க்கும் மேற்பட்ட மடங்கள் உள்ளன. இங்குவந்து 200க்கும் மேற்பட்ட அன்னதானக் குழுக்கள் பக்தர்களின் பசி போக்குகிறார்கள்.
இப்போது நாம் இருப்பது நான்காம் மலை. இது அநாகதம் என்ற வாயுவின் அம்சம். இதன் தொடக்கம் மிகக்கடுமையானது. இதை முழங்கால்திட்டு என்பார்கள். ஒவ்வொரு அடியையும் முழங்கால் அளவுக்குத் தூக்கிவைத்து நடக்கவேண்டும். சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள முழங்கால் திட்டைக் கடந்துவிட்டால் யாத்திரையில் முக்கால்பாகத்தை தாண்டிவிட்டதாகக் கருதலாம். அடுத்து சீதை வனம். அரிய மூலிகைகள் அடர்ந்த காடு. காயசித்தி, யோகசித்தி தரும் மரங்கள், நரை, திரை, மூப்பு ஒழித்து சிரஞ்சீவியாக வாழச்செய்யும் மரங்கள், மாங்கிசபேதி, அங்கிசபேதி, அயபேதி, அன்னபேதி மூலிகைகள், நவமணிகள் விளையும் கொடிகள் மிகுந்த இந்த சீதைவனத்தில் ஸ்படிகம் போன்ற அரிய கற்களும் உள்ளன. இம்மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஏமகிரியில் ஒரு தாமரை ஓடை உண்டு. அதில் மூழ்கி எழுந்தோர் சகல சித்திகளும் பெறுவர். அதனருகே உள்ள பால்கிணற்று நீரை அள்ளி அருந்தினால் ஆறு மாதங்கள் அன்ன, ஆகாரமின்றி வாழலாம் என்கிறது பேரூர் புராணம். இம்மலைவாழ் சித்தர்கள் இவ்விதம்தான் பசியை வென்றார்கள் போலும்.
வெள்ளியங்கிரியில் சீதை வனம் வந்ததெப்படி..?
சீதை வனம் மட்டுமல்ல... இம்மலையின் சரிவுப்பகுதியில் அனுமன் நதியும், ராமர் ஓடையும் கூட உண்டு. இந்த தொடர்பை உணர, கொஞ்சம் ராமாயணத்தை உணரவேண்டும். மாரீசன் பொய்மான்
வேடமிட்டு ஓட, அதன்மீது ஆவல்கொள்கிறாள் சீதை. ராமன் மானைத் தேடிப்போக, இலக்குவன் ராமனைத் தேடிப்போக, தனித்திருந்த சீதையைக் கவர்ந்து செல்கிறான் ராவணன். ஓடியது பொய்மான் என்பதை உணர்ந்த ராமனும், இலக்குவனும் சீதையைக் காணாமல் தவித்து சுதீக்ஷனனிடம் யோசனை கேட்கிறார்கள். அவன், இரளி மலைக்
குன்றத்தில் உள்ள பெண்தபசி சபரியிடம் அனுப்புகிறான். சபரி சுக்ரீவனை அறிமுகப்படுத்து
கிறாள். சுக்ரீவனின் அமைச்சனான அனுமனின் யோசனைப்படி, வாலியை வதம்செய்து அவனின் 70 வெள்ளம் சேனையை வசப்படுத்துகிறான் ராமன். அந்த சேனையை நான்கு பிரிவுகளாக்கி நான்கு திசைகளுக்கும் அனுப்பி சீதையைத் தேடப்பணிக்கிறான். தென்திசைக்குச் சென்ற படையில் இடம்பெற்ற அனுமன், விந்தமலை, ஏமகூடம்,
தண்டகமலை, பாண்டுமலை, சந்திரகாந்த மலை தாண்டி வெள்ளியங்கிரியிலும் தேடியலைந்தார். அனுமனின் கண், கருத்து, காட்சி எல்லாவற்றிலும் சீதையே இருந்தாள். அவ்வித நோக்கத்தோடு
அனுமன் வந்திறங்கிய இடமே சீதை வனம்.
இந்திரஜித்தின் பாணத்தால் இலக்குவன் நிலை
குலைந்து விழுந்த தருணத்தில், சாம்பவனின் ஆலோசனையின் பேரில் சஞ்சீவி மூலி கையை தேடிஅலைந்த அனுமன், அப்போதும் இந்த சீதை வனத்திற்கு வந்திருக்கலாம் என்று யூகிக்
கிறார்கள் கம்பன் ஆர்வலர்கள். மூலிகை வாசனை, குளுகுளு காற்றால் களைப்பு மிரண்டோடுகிறது. ஏற்ற, இறக்கங்கள் மிகுந்த பகுதி என்றாலும் மெல்லிய காற்று உடலில் பரவுவதால் பயணம் இதமாகத்தான் இருக்கிறது. பள்ளப் பகுதி தாண்டி சற்று சிரமமான ஒரு மேடு ஏறினால் சீதை வனம் முடிகிறது. மேட்டின் முகப்பில் ஒட்டர் சமாதி. வெள்ளியங்கிரி லிங்கேஸ்
வரனை முதன்முதலில் அடையாளம் கண்ட மனிதர். இவர், சிவபக்தியும் ஆசாரமும் கொண்ட லிங்காயத்தார் எனப்படும் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேய்ச்சல் தொழில் செய்த இவர் ஒருமுறை வெள்ளியங்கிரி மேல்மலை குகையில் ஆடு, மாடுகளை அடைத்து பட்டி போட்டிருந்தார். அப்போது, மேய்ச்சல் முடித்து ஆங்காரத்தோடு வந்த ஒரு காராம் பசு, பட்டியின் கதவை நெட்டித்தள்ளி, கன்றுக்கு பால் கொடுத்தது. தாயன்பு கிடைத்த மகிழ்வில் துள்ளிக்குதித்த கன்றுவின் கால்குளம்பு அருகில் இருந்த ஐம்முகம் கொண்ட புற்றின் மேல் இறங்கியது. அப்புற்றுக்குள் கன்றின் கால்குளம்பு சிக்கிக்கொள்ள, தாய்ப்பசு மனம் பொறுக்காமல் அந்த புற்றை தன் கொம்புகளால் குத்திப் பெயர்த்தது. அத்தருணம், புற்றுக்குள் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. இதைப் பார்த்து அதிர்ந்த ஒக்கலிகர், புற்றை முழுதாகத் தோண்ட... குளம்படியாலும், கொம்படியாலும் சிதைந்த ஐமுகலிங்கங்கள் வெளிவந்தன. இச்செய்தியை ஒக்கலிகர் வழியாக உலகம் அறிந்தது. அந்த ஒக்கலிகரே காலப்போக்கில் ஒட்டரானார். ஈசனின் திருவடியிலேயே கிடந்து காலம் கழித்த ஒக்கலிகர் உடல்நீத்த இடம்தான் ஒட்டர் சமாதி. கரடுமுரடான மலையில் கற்களைக் கொண்டு நடைபாதை அமைத்தது இவர்தான். அதுமட்டுமல்ல, களைப்பால் திணறும் பக்தர்களுக்கு உரமூட்டி ஈசனின் சந்நதிக்கு கொண்டு சேர்ப்பதும் இந்த புனிதர்தான்.