Monday, March 15, 2010

சங்க விடுதியில் தங்கிய ஒருவரின் வலைப்பதிவு

வறுமைக்கு வந்த காதல் என்ற பெயரில் அவர் எழுதியது.
தூரல் நின்று விட்டு இருந்தது.நிசப்தமான அந்த இரவில்,சீரான இடைவெளி விட்டு தூங்கி தூங்கி வ்ழித்தேன்.தொடர்ந்து தூங்கினால் இருக்கும் அலுப்புக்கு எழுந்திருக்க முடியாமல் போகலாம்.அப்புறம் அவமானப் பட வேண்டியது தான்.வந்து ஒரு நாள் கூட ஆகவில்லை.அதற்குள் ஒரு வருடத்தில் ஏற்படும் களைப்பு மனதில்.காலையில் இருந்த தைரியம் இப்பொழுது இல்லை.நான் பட்டம் வாங்குவதெல்லாம் நடப்பது போல தோன்றவில்லை.ஆனால் முடிந்தளவு முயற்சி செய்து பார்ப்போம்.எது நடந்தாலும் பரவாயில்லை.

காலை நான்கு மணியை கடந்து இருந்தது.மெதுவாக கீழிறங்கி வந்தேன்.குளியலறையை சத்தமின்றி திறந்து,தேவையான சுத்தங்களை செய்து கொண்டேன்.நல்ல நேரம் குளியலறை வெளியே இருந்தது.துணிகளை நன்றாகப் பிழிந்து மறுபடியும் அதையே போட்டுக் கொண்டேன்.பாதி ஈரம் தான்.நடக்க நடக்க காய்ந்து விடும். சுபாஷ் என்னுடன் பத்தாம் வகுப்புவரைக் கூடப் படித்தவன்.செண்ட்ரல் பக்கத்தில் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்க்கிறான்.அவ்னைப் பார்த்து வேலை கிடைக்குமா என்று கேட்க வேண்டும்.இன்னொருவன் பாலா எனக்கு இரண்டு வருட சீனியர்.அவன் வேன் ஓட்டுகிறான்.அவனிடம் ஏதாவது ஐடியா கேட்க வேண்டும்.இவன் இருப்பது அம்பத்தூர்.

போட்டிருக்கும் துணி காய்வதற்காவதும் நான் நடக்க வேண்டும்.

அடையாரிலிருந்து மைலாப்பூர் வழியாக செண்ட்ரலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.ஒரு வழியாக சுபாஷ் வேலை செய்யும் 'டெல்லி தர்பார்'ஐ அடைந்தேன்.மூன்று நட்சத்திர ஹோட்டல் என்று சொன்னான்.நல்ல உணவுக்கு வழி செய்தான்.

சரி விஜய்,காலேஜ் சேந்துட்டயா?

ம்.சேந்துட்டேன்.ஆனா படிக்க முடியுமாத் தெரியல.

ஏண்டா?

தங்குறதுக்கு எடமில்ல.சாப்பாடுக்கு வழியில்ல.ஒரு நா கடக்கறதுக்குள்ள உயிர் போகுது.இதுல எங்கடா நாலு வருசத்த ஒப்பேத்துறது.

ஏய் அப்படியெல்லாம் சொல்லாதடா.பாரு நான் படிக்க பயந்துட்டு ஸ்கூல விட்டுட்டு ஓடினேன்.இப்ப என்னாச்சு? எச்சி எலை எடுக்கிறேன்.எதாவது யோசிப்பம்டா.

ஆமா...,நீ எங்கத் தங்குற?

அத ஏண்டாக் கேட்குற? ஒரு கொடோன் மாதி இருக்கும்.ஒரே டாய்லெட்.கிட்டத் தட்ட இருபது பேரு தங்குறோம்.இதில ஃப்ரண்ட்ஸ்கள தங்க வெச்சா, சண்டைக்கு வருவானுங்க.

பரவாயில்லடா.ஏதாவது ஈவ்னிங் ரெஸ்ட்டாரண்ட் வேல,இல்ல நைட் செக்யூரிட்டி வேல ஏற்பாடு பண்ண முடியுமா?

தேடிப் பாத்தாதான் தெரியும்.சரி வா ட்ரைப் பண்ணலாம்.

உடனே போக வேண்டிய இடங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டான். மாலை நேர ஹோட்டல்கள், அடுக்கு மாடி வீடுகள் இப்படியென லிஸ்ட் போட்டுக் கொண்டான்.

விஜய், இன்னக்கி எனக்கு லீவ் தான்.முடிஞ்சளவுத் தேடலாம். நாளக்கி நீயாத் தேடு. எதாவது வழி கிடைக்கும்.

சரிடா.

தேடினோம்.தேடினோம்..தேடினோம்...

ம்கூம்.ஒன்றும் அமையவில்லை.துணி காஞ்சதுதான் மிச்சம். மாலையானதும் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு, என் இருப்பிடம் பெசண்ட் நகர் கடற்கரைக்கு வந்தேன். நேற்று போலவே இன்றும் இரவு பன்னிரெண்டு வரைக் கடற்கரை, அதற்கு மேல் சுரேஸ் வீட்டு மொட்டை மாடி.காலை நான்கு, நான்கரை மணிக்கு தெருவோடு.தொடர்ந்து மூன்று நாட்கள் இதே வாழ்க்கை. உடம்பு அலுத்து விட்டது. எங்காவது தனிமையில் ஓ வென்று அழனும் போல் இருந்தது. நம்பிக்கை தளர்ந்து கொண்டு இருந்தது.

மறுபடியும் சுபாஸை சந்தித்தேன். சாதாரணமாகப் பேசினாலும் கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தது. அவனுக்கு என்னைப் பார்க்க கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு, கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லி, சென்று விட்டான். தண்ணீர் குடித்ததும் கவலை மட்டுப் பட்டது. சிறிது நேரம் கழித்து வந்தான்.

விஜய், எனக்கொரு இடம் தெரியும், தங்குறதுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூவாதான். ஆனா அது எங்க ஒக்கலிகர் கவுண்டர் சங்கம்.

எப்படிடா? யாராவது என்ன ஜாதின்னு கேட்டா, நான் என்ன சொல்றது.

கவுண்டருன்னே சொல்லு. நானே வந்து எனக்கு சொந்தமுன்னு சொல்றேன். எங்க ஊர்ல இருந்து எப்பாவதுந்தான் ஆளுங்க வரவாங்க. அதனாலப் பிரச்சினை இல்ல. அப்படியே யாராவதும் வந்தாலும், அப்பா யாருன்னு விசாரிச்சா எங்க அப்பா பேரையே சொல்லு. அதெல்லாம் ஒன்னும் கண்டு பிடிக்க முடியாது.

சரிடா. ஒரு நைட்டாவதும் நல்லாத் தூங்குறேன்.

ஏனென்றால் என்னை இன்னாரென்று கண்டுபிடிக்க குறைந்த பட்சம் ஒரு வாரமாவது ஆகலாம். அது வரையாவதும் சற்று நிம்மதியாக இருக்கலாமென்று தைரியமாக ஒத்துக் கொண்டேன். தியாகராய நகர் பசுல்லா சாலையில் ஒக்கலிகர் சங்கம் இருந்தது. அமைதியான இடம். சுபாஸ், என்னை தன் சகோதரனென்றும், ஹாஸ்டல் கிடைக்கும் வரை இங்கு தங்கிக் கொள்ள அனுமதி வாங்கி விட்டான். ஒரு நாளைக்கு பத்து ரூபாய் தான் வாடகை. எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டான்.

எத்தனை உத்தமமான நண்பன். படிக்கும் போது பாடங்களை சொல்லித் தந்ததைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு செய்ததில்லை. என் சொந்த ஊரில் அதே கவுண்டர் இன மக்களில் சிலர் சாதியைக் காட்டி என்னை துன்புறுத்தகையில் இவன் இங்கு என்னை சொந்த சகோதரனென அரவனைத்துக் கொண்டதை நினைத்த பொழுது கண்களில் கண்ணீர் ஒத்தடம் கொடுத்தது.

ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. மேல் தட்டு மக்களில் யாரோ ஒரு சிலர் தான் அறியாமல் அடுத்தவரை வதைக்கிறார்கள். சுபாஸைப் போல பல நல்ல மனிதம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அன்று வரை அறியாமையால் சாதி முறையிலான என் கோபம் தனி மனிதக் கோபமாக மாறியது. அதாவது அதுவரை எனது ஊரின் ஒட்டு மொத்தக் கவுண்டர்களின் மேல் இருந்தக் கோபம் ஒரு சில தனிப்பட்டவர்கள் மேல் திரும்பியது.

சங்கம் என்றால் ஒரு பெரிய விடுதி போல கிடையாது.ஒரு இரண்டு படுக்கை அறை கொண்ட பெரிய வீடு.நுழைவாயிலில் ஒரு சிறிய ஆபிஸ். பெரிய ஹால். ஒரு பத்து பேர் படுக்கலாம். முக்கியமானவர்களுக்கு மட்டும் படுக்கை அறை. ஒட்டு மொத்த அலுப்பு என்னை உலுக்கிப் போட்டதில்
மாலை ஏழு மணிக்கெல்லாம் நன்றாகத் தூங்கி விட்டேன்.ஒன்பது மணி இருக்கும், யாரோ எழுப்பினார்கள்.விஷயம் கேட்டதற்கு, உங்கள் ஊரிலிருந்து

மனோகரன் வந்திருப்பதாகவும், பார்க்க வேண்டுமென்று சொன்னதாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மனோகரன்....?சுபாஸின் ஊர் ஓடைப்பட்டி. மனோகரன் அ.தி.மு.க ஆவில் முக்கியமான நபர். எம்ஜியார் அவர் வீட்டில் உணவு உண்டதாக சொல்லக் கேள்விப் பட்டிருக்கேன்.பெரும் புள்ளி. தலை தட்டாமலை சுற்றியது. தூக்கம் போன இடம் தெரியவில்லை.கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாப் போல தலையை தொங்கப் போட்டுக் கொண்டு பலி பீடத்தை நோக்கி நடந்தேன்.

என்ன என்ன கேட்கப் போறாரோ, நெஞ்சு திக் திக்கென்று இருந்தது.

நீ யாரு மகப்பா? கேட்கும் பொழுதே ஆளை விட்டால் போதும் ஓடிவிடத் தோன்றியது.
யார் மகன், அப்பா பேரு இதெல்லாம் ஓரளவு உளறி விட்டேன். ஆனால் அடுத்தடுத்து அவர் கேட்டக் கேள்விகள் ஒன்றும் விளங்காமல், பேயடித்தது போல நின்று கொண்டேன்.

படாரென எழுந்த அவர், என் தோளில் கை வைத்து அழுத்தி...,